நிலவும் ஒரு வழிப்போக்கனும்

நிலவே,
இந்த வழிப்போக்கனும்
உன்னைக் காண்கிறான்
நீ அவனைக் காண்கிறாயா?

நிலவே,
நீ உயரத்தில்
வானத்தில், இருக்கிறாய்,
அகண்டமான வானத்தின் நடுவே
அமர்ந்திருக்கிறாய்.
உனது தண்ணொளி
எங்கும் தழைகிறது
ஒரு ஓரத்திலிருந்து
இந்த வழிப்போக்கன்
உன்னைக் காண்கிறான்.

உனது
வெள்ளி ஓரவிளிம்பின்
இமைப்புக்குள்
இந்தச்
சின்ன மனிதன் தெவிகிறானா?
நீ இந்த வழிப்போக்கனைக் காண்கிறாயா?

நீ அமர்ந்துள்ளாய்,
நிறைவாகத் ததும்புகிறாய்,
உன் நிறைவுக்கு
இவன் உவமை தேடுகிறான்.
உன்னையும்
இவன் கிக்கிலிக் கொட்டை
என்று எண்ணினானா?
கிக்கிலிக் கொட்டையை கிலுக்கிப் பார்த்தால்
சத்தம் கேட்கும்.
அந்தச் சத்தம்தான்
இவனுக்கு சந்தோஷமளித்த்தா?
சத்தம்
கிக்கிலிக் கொட்டைக்கு உள்ளமைக்கு
சான்று என இவன் நினைத்தானா?
அதே சத்தம்,
அதனுள் இருக்கும்
வெற்றிடத்திற்கு சாட்சி என்று
இவன் ஏன் உணரவில்லை

நீயோ நிறைந் திருக்கின்றாய்
இவன் இன்று வந்தவன்
இவன் வர முன்னரே
நீ நிரம்பி இருக்கின்றாய்.
நிரம்பி இருப்பது கிலுங்காது அல்லவா?
அது அடக்க மானது அல்ல.
நிறைவு.
உன் நிறைவைக் கண்டு
இவன் திகைக்கிறான்.
தன் கிக்கிலிக் கொட்டையை
கிலுக்கிப் பார்க்கும்
குற்றத்திற்காக முகங்கோனி
ஒதுங்குகிறான்.
அந்த இலைகளின் இருளில்,
இந்தப் புதர்களின் மறைவில்
இவன் ஒதுங்கி ஒதுங்கி நடக்கின்றான்.
நிலவே,
நீ இந்த வழிப்போக்கனைக் காண்கிறாயா?
உனது வெள்ளி விளிம்பின் அமைப்புக்குள்
இந்தச்
சின்ன மனிதனும் தெரிகின்றானா?

Leave a Reply

Your email address will not be published.