நாங்கள் இரு தும்பிகள்

நாங்கள் இருதும்பிகள் பாடிவந்தோம்.
நாங்கள் இருபறவைகள் பறந்துசென்றோம்
எங்கும் திரிந்தோம் – புல் – வெளி – மலை – அருவி – ஆறு
எங்கும் பறந்தோம் – கிறவல் – மணல் – கடல் – காற்று,

நானும் அவனும் கூடிச் சென்றோம்
எங்கள் சைக்கிள் கம்பிகள் சுழன்றன.
கண்ணில் மாலையில் பாயும் சுடரொளி
கம்பியில் பட்டு எங்கோ தெறித்தது.
வேப்ப மரத்தின்கீழே,
மயானப்
பூமியின் அருகே,
உடைந்த தார்றோட்டுப் பாதையில்
தென்னஞ் சோலையின் கீழே
நானும் அவனும் கூடிச்சென்றோம்
எங்கள் சைக்கிள் கம்பிகள் சுழன்றன….

அந்த மூலையில் வந்து திரும்பினம்
”அப்போது எல்லாம் மாறும்” என்றனம்
”மாறி மாறி வளரும்” என்றனம்
”வளர்ந்து வளர்ந்து மாறும்” என்றனம்
இதுபோல் பேசிப்பேசி உண்மை தெளிந்தனம்
நாங்க்ள இரண்டு தும்பிகள் பறந்தனம்…

அந்த மூலையைக் கடந்து வருகையில்
அடித்த கடலின் காற்றைத் துடைத்தனம்
செங்காந்தள் பூக்கள் தெரிந்தன.
‘சிறிதுகாலம் மண்ணுள் இருந்தவை
இன்று மீண்டும் முளைக்காதே’ என்றனம்
இறக்கத்துருண்டனம் – காற்றுள் புகுந்தனம்

நாங்கள் இருதும்பிகள் பாடி வந்தோம்
நாங்கள் இருபறவைகள் பறந்துசென்றோம்
எங்கும் திரிந்தோம் – புல் – வெளி – மலை – அருவி – ஆறு
எங்கும் பறந்தோம் – கிறவல் – மணல் – கடல் – காற்று.

Leave a Reply

Your email address will not be published.