அழைப்பு

தூரத்தில் நான் கேட்டேன்
குரல் ஒன்று
தூரத்தில் நான் கேட்டேன்
பாதி இரவினிலும் பட்டப்பகலின் அனலினிலும்
மோதித் தெறித்து
மெல்ல முனகி அழுவதுபோல்
தூரத்தில் நான் கேட்டேன்
குரல் ஒன்று
தூரத்தில் நான் கேட்டேன்

பக்கத்தில் ஒரு கோயில்
அதன்பக்கத்தில் ஒரு அரவு-
சொர்க்கத்தின் வழிபோல
இலை சோவெனக் கலகலக்கும்.
சற்று அப்பால் ஆலைகளில்
சருகுதிரும்.
இடைவெளியில் திக்கற்ற கன்றொன்று
தாயைத் தேடிவரும் – அப்போதும்,
தூரத்தில் நான் கேட்டேன்.

உலகருகே நிற்பேன்,
ஊரைக்காவலிடும் தென்னைகளில்
படரும் இருள் தூரத்தில்
அஞ்சிப்பறக்கும் சிலபறவை
தொடரவரும் பிறப்பெல்லாம்
எங்கோ தூரத்தில் கேட்டதுபோல்
குரலும் அதுகேட்கும்
என் குழந்தை நினைவெல்லாம்
தூரத்தில் நான் கேட்டேன்
குரல் ஒன்று
தூரத்தில் நான் கேட்டேன்

(‘நீர் வளையங்கள்’ கவிதைத்தொகுப்பு)

Leave a Reply

Your email address will not be published.